Wednesday, December 29, 2010

சில தனிப்பாடற் காட்சிகள் 14

முன் பதிவில் கட்டளைக் கலித்துறை என்பது பற்றி எழுதியிருந்தேன்.இது மிக கடினமான யாப்புக் கட்டமைப்புக் கொண்டது.

அதில் முதற்சீர் நேரசையில் இருந்தால் அந்தப் பாடல் ஒவ்வொரு அடியிலும் ஒற்றெழுத்துக்கள் நீக்கி 16 எழுத்துக்களைக் கொண்டு முதல் மூன்று சீர்கள் ஒவ்வொரு அடியிலும் இயற்சீர் வெண்டளையும்,வெண்சீர் வெண்டளையும் கொண்டு , மொத்தப் பாடலில் ஒற்றெழுத்துக்கள் நீக்கி 64 எழுத்துக்கள் வரும்.
முதற்சீர் நிரைசையில் இருந்தால் அந்தப் பாடல் ஒவ்வொரு அடியிலும் ஒற்றெழுத்துக்கள் நீக்கி 17 எழுத்துக்களைக் கொண்டு முதல் மூன்று சீர்கள் ஒவ்வொரு அடியிலும் இயற்சீர் வெண்டளையும்,வெண்சீர் வெண்டளையும் கொண்டு 
மொத்தப் பாடலில் ஒற்றெழுத்துக்கள் நீக்கி 68 எழுத்துக்கள் 

வரும்.

ஒவ்வொரு அடியிலும் ஈற்றுச்சீர்,அதாவது நான்காவது சீர் கருவிளங்காய்,கூவிளங்காய், என்ற வாய்பாட்டைக் கொண்டு முடியும்.

இது போல முழுவதும் கட்டளைக் கலித்துறையில் எழுதப்பட்ட நூல்கள் கோவை என அழைக்கப்படும்.

(1)அம்பிகாபதிக் கோவை
(2)பாண்டிக் கோவை
(3)தஞ்சை வாணர் கோவை
(4)திருக் கோவையார்
(5)யாப் பெருங்கலக் காரிகை

இன்னும் வலைப் பதிவு நிறைவடையவில்லை
அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன் 

Saturday, December 4, 2010

சில தனிப்பாடற் காட்சிகள் 13

நான் கண்ட படங்களிலே மஹா கவி காளிதாஸ் எனக்கு அனைத்துப் பாடல்களும் மிகவும் பிடித்த படம் இது.இதில் கட்டளைக் கலித்துறை என்பது வெண்பாவில் ஒவ்வொரு அடியிலும் ஒற்றெழுத்துக்களை நீக்கி 16 எழுத்துக்களை மட்டும் அமைத்துப் பாடுவது.


அதாவது முதலடியில் ஒற்றெழுத்துக்களை( புள்ளி வைத்த எழுத்துக்களை) நீக்கி 16 எழுத்துக்கள் இருந்தால் மற்ற மூன்று அடிகளிலும் அதே போல் ஒற்றெழுத்துக்களை நீக்கி 16 எழுத்துக்களே வரும்.


கீழ்க்கண்ட பாடலைப் பாருங்கள்


தங்கமே தாமரை மொட்டுகளாகி தலையெடுக்க
குங்குமம் தோய்ந்த முகப்பினில் வண்டு கொலுவிருக்க
பங்கயன் விந்தைப் படைப்பாகி நிற்கும் பசுங்கொடிமேல்
பொங்கியேபூத்த முழுநிலா வண்ணம் புறப்பட்டதே!


முதலடியில்
த+க+மே+தா+ம+ரை+மொ+டு+க+ளா+கி+த+லை+யெ+டு+க=16 எழுத்துக்கள்
இரண்டாமடியில்

கு+கு+ம+தோ+த+மு+க+பி+னி+வ+டு+கொ+லு+வி+ரு+க=16 எழுத்துக்கள்
மூன்றாமடியில்
ப+க+ய+வி+தை+ப+டை+பா+கி+நி+கு+ப+சு+கொ+டி+மே=16 எழுத்துக்கள்

நான்காமடியில்

பொ+கி+யே+பூ+த+மு+ழு+நி+லா+வ+ண+பு+ற+ப+ட+தே=16 எழுத்துக்கள்

இந்த ஒளிப்படக்காட்சியைக் காணுங்கள்



இதில் மஹா கவி காளிதாஸ் கூறும் பாடலின் விளக்கம் தங்கமே தாமரை மொட்டுகள் போலாகி உன் ஸ்தனங்கள் தலையெடுத்து நிற்க,குங்குமம் தோய்ந்த முகத்தினில் கருவண்டுகளாக கண்கள் நின்று காட்சியாக கொலுவிருக்க,பிரம்மனின்(தாமரை மலரில் அமர்ந்திருக்கும் பங்கயன்) விந்தைப் படைப்பாகி நிற்கும்,பசுங்கொடிபோல் நிற்கும் மங்கையின் மேல் பகுதியில் பொங்கியே நிற்கும் முழு நிலாப் போல் உன் முகம் தோன்றுகிறது,என்று ஒரு பொருள்படும்.

இன்னோர் பொருள் தங்கமே தாமரை மொட்டுகளாகித் தலையெடுத்து நிற்க,குங்கும நிறம் போல் நிறம் தோய்ந்த தாமரை மலர் முகப்பினில் தேனுண்ணும் வண்டுகள் கொலுவிருக்க,பங்கயன்(தாமரை) ஆன தந்தைத் தாமரையின் படைப்பாகி நிற்கும் மகளாகிய தாமரைக் கொடிமேல் பொங்கியே பூத்த முழு நிலா புறப்பட்டு நிற்கிறதே என்று பொருள்படும்.

இதில்போஜராஜன் மஹா கவி காளிதாஸிடம் கவி முரண் பற்றி கேள்வி கேட்கிறார்.அதாவது ஒரு கவிக் காட்சியை வருணிக்கும் போது அதில் வேறுபட்ட வேளைகளில் நடக்கும் நிகழ்வுகளைக் கூறக்கூடாது,அதை கவி முரண் என்பார்கள்.எனவே இரவில் வரும் சந்திரனும்,பகலில் மலரும் தாமரையும் சந்திக்கிறதே என்று கேட்கிறார்.

அதை மஹா கவி காளிதாஸ் மறுத்து இரவில் வரும் நிலவையும்,பகலில் மலரும் தாமரை, என்று தெரிந்ததனால்தான் இரவில் அது மொட்டாக இருக்கும் தாமரை மொட்டு என்று கூறியுள்ளேன்,என்பதால் இது கவிமுரண் இல்லை என்கிறார்.


அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன் 

Thursday, December 2, 2010

சில தனிப்பாடற் காட்சிகள் 12

பயனில்லாத ஏழு விஷயங்களை இங்கு பார்ப்போம்.


ஆபத்துக் குதவாப் பிள்ளை யரும்பசிக் குதவா அன்னம்
தாபத்தைத் தீராத் தண்ணீர் தரித்திர மறியாப் பெண்டிர்
கோபத்தை யடக்கா வேந்தன் குருமொழி கொள்ளாச் சீடன்
பாபத்தை தீராத் தீர்த்தம் பயனில்லை ஏழுந்தானே!


ஆபத்து சமயத்திற்கு உதவாத பிள்ளை,அருமையான பசி வேளையில் உதவாத சோறு(அன்னம்),தாகத்தை தீராத தண்ணீர்,குடும்பத்தின் தரித்திர நிலை தெரியாத குடும்பப் பெண்கள்(மனைவி,  மகள்,  அம்மா,  சகோதரி, அத்தை, அண்ணி, கொழுந்தியாள், நாத்தனார்), கோபத்தை அடக்க முடியாத மன்னன்( இக்காலத்தில் அமைச்சர்கள்),குருவான ஆசிரியரின் அறிவுரைகள், கருத்துக்கள், பாடங்களை கற்று வாழ்க்கையில் கடைப்பிடிக்க தெரியாத மாணவன், பாபம் செய்தவரை அப்பாபத்திலிருந்து விடுவிக்காத தீர்த்தம், இவை ஏழும் பயனில்லை என்று கூறுகிறது விவேக சிந்தாமணி.

அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன் 

Saturday, October 9, 2010

சில தனிப்பாடற் காட்சிகள் 11(சரஸ்வதி பூஜை ஸ்பெஷல்)

காளமேகம் எனக்கு பிடித்த தலைமைப் புலவர்.அவர் எழுதிய கவிதைகள் பலர் பலருடைய வலைப் பூக்களில் வெளியிடுகின்றனர். சித்தர் ராச்சியம் தோழியும்,ஞான வெட்டியான் அவர்களும் வெளியிடுகின்றனர்.  அவர்கள் வெளியிடும் பாடல்கள் தவிர்த்து பிற பாடல்கள் மட்டுமே வெளியிட முயற்சி செய்கிறேன்.

ஒருமுறை அதிமதுர கவிராயர் என்பவர் வீணான படாடோபத்துடன் ( இப்போதைய வார்த்தைகளில் பந்தாக் காட்டுவது ) யானை மீது ஏறி பல புலவர்கள் சூழ்ந்து நடந்து வர கொட்டு முழக்கமிட,அதிமதுர கவி வருகிறார் ! வருகிறார் ! பராக்! பராக்! பராக்! என்று பராக்காரன் புகழ்ந்து பறை சாற்ற ,வீரர்கள் வீதியில் இருப்போர்களை போ!போ! என்று விரட்ட,அவ்வழியே வந்த நம் கவி காளமேகம் இதைக் கண்டு கோபம் கொண்டு கீழ்க் காணும் கவியைப் பாட

அதிமதுர மென்றே அகிலமறிய

அதிமதுர மாயெடுத்துச் சொல்லும் ;- புதுமையென்ன?

காட்டுச் சரக்குலகில் காரமில் லாச்சரக்குக்

கூட்டுச் சரக்கதனைக் கூறு.

பொருள் ;- அதிமதுரம் என்று என்று உலகோர் அறியும்படி அதிமதுரமாகப் புகழ்ந்து பறை சாற்றுகின்றையே! காட்டிலுள்ள சரக்குகளில் காரமில்லாத சரக்கு எதுவென்றும் ? கூட்டி உபயோகிக்கின்ற சரக்கு எதுவென்றும் கூறு?

என்பதாகப் பாடினார். 

அதிமதுரத்தை எப்போதும் மற்ற மருந்துகளுடன் கூட்டுச் சரக்காகவே உபயோகிக்க மாட்டார்கள்.தனிச் சரக்காக உபயோகிக்க மாட்டார்கள். அதுபோல தனியாக பிரகாசிக்கும் எந்தத் திறமையும் இல்லாத நீ ஏன் இந்தப் படாடோபம் செய்கிறாய் ? என்ற கருத்தோடு இதைக் கூறினார்.

இதைக் கேட்டவுடன் அதிமதுர கவி தூக்கிப் போட்டாற் போலிருந்ததனால்,  கோபம் கொண்டுஇவன் இவ்வளவு அவமரியாதையாகப் பேசுகிறான் அரசரிடம் கூறி இவனுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் அவன் யாரென்று விசாரித்து வா என்று ஒரு வீரனை அனுப்பி வைத்தான்.

அந்த வீரனும் கவி காளமேகத்தைப் பார்த்து நீர் யார்உம் பேர் என்னஉம் ஊர் யாது?என்று விசாரிக்ககவி காளமேகம் நான் சொல்வதை யெல்லாம் உன்னால் திருப்பிச் சொல்ல முடியாது எனவே நான் ஒரு ஓலையில் இதை எழுதித் தருகிறேன்.என்று கூறி கீழ்க் கண்டவாறு எழுதித் தந்தார்,

தூதைந்து நாழிகையில் ஆறுநாழிகைதனில்

சொற் சந்த மாலை சொல்லத்

துகளிலா அந்தாதி யேழுநா ழிகைதனில்

தொகைபட விரித்துரைக்கப்

பாதம்செய் மடல்கோவை பத்துநா ழிகைதனில்

பரணியொரு நாள்முழுதுமே

பாரகாவியமெலாம் ஓரிரு தினத்திலே

பகரக் கொடி கட்டினேன்

சீதம்செ யுந்திங்கள் மரபினான் நீடுபுகழ்

செய்யதிரு மலை ராயன்முன்

சீருமா றாகவே தாறுமா றுகள்சொல்

திருட்டுக் கவிப் புலவரைக்

காதங் கறுத்துச் சவுக்கிட் டடித்துக்

கதுப்பில் புடைத்துவெற்றிக்

கல்லணையி னோடுகொடிய கடிவாளம் இட்டேறு

கவிகாள மேக நானே.

என்று தம் ஆசுகவித் திறத்தைச் சிறப்பித்தும்,தன் பெயரை வெளிப்படையாகச் செப்பியும்,திருமலைராயன் சமஸ்தானத்து வித்துவான்கள் அக்ரமத்தைக் குறிப்பிட்டுச் சொல்லியும் அவர்களை இகழ்ந்தும் ஒரு சீட்டுக்கவி எழுதி அந்த வீரனிடம் கொடுத்தனுப்பினார்.

இந்த விஷயதைக் கேட்ட அதிமதுர கவிராயர் மன்னரிடம் மன்னரே  அவன் எங்களை மட்டுமல்ல ,உங்களையும் உங்கள் சமஸ்தானத்து கவிராயர்களையும் அவமதித்துள்ளான்,எனவே நான்கு வீரர்களை அனுப்பி அவனை இழுத்து வரச் செய்து தக்க தண்டணை வழங்க வேண்டும் என்று கூறினர்.இது கேட்ட மன்னன் திருமலைராயன் உடனே நான்கு வீரர்களை அனுப்பி கவி காளமேகத்தை பிடித்து இழுத்து வரச் சொல்லி ஆணையிட்டார்.

அவர்கள் கவி காளமேகத்தைப் பிடித்து இழுத்து வர முயற்சிக்கையில்அவர் வீரர்களைப் பார்த்து என்ன தவறு செய்தேன்.நான் குற்றவாளி அல்ல நான் பெருங் கவி காளமேகம் வீண் தொல்லை செய்தால் அறம் பாடி அழித்துவிடுவேன்.


(அறம் பாடுதல் என்பது அக்காலத்தில் இறைவனிடம் நேரடியாக அறத்தைக் கூறி அறம் நிலைநாட்டுதல் அதன் மூலம் அறம் குலைத்தவர்களை தண்டித்தல்.ஒரு நூற்றாண்டு முன் வரை அறம் பாடி அவர் பாடலால் தீபம் ஏற்றப்பட்டால் அவர் குற்றவாளியல்ல என்று நிரூபித்துள்ளார்கள்என்று சொல்ல வீரர்கள் பயந்து பணிவோடு ஒதுங்கி விலகி நின்றார்கள்.நானே வருகிறேன் என்று கூறினார்.

அரசன் சமூகத்திற்கு சென்றால் அங்கே,அரசனைச் சுற்றி அதிமதுர கவிராயர் அரசவைக் கவிஞராக அமர்ந்திருக்க, அரசனைச் சுற்றி நெருக்கமாக அவைப் புலவர்கள் அனைவரும் அமர்ந்து கொண்டு,கவி காளமேகத்தை அரசனிடம் நெருங்க விடாமலும் ஆசனம் கொடுக்காமலும் பாராமுகமாக இருந்தனர்.

இது கண்ட கவி காளமேகம் அரசனிடம் ஒரு எலுமிச்சம்பழத்தை எடுத்து நீட்ட,பெரியோர்கள் தரும் அட்சதை,பூ,பழம் இவற்றை மறுக்கவோ, அவமதிக்கவோ கூடாது என்பது விதியாகையால்,மன்னன் கை நீட்டி அதைப் பெற முயல அவைப் புலவர்கள் விலகி வழிவிட்டனர்.


மன்னன் எலுமிச்சம் பழம் பெற்ற பின்னும் ஏதும் பேசாமலும்கவி காளமேகத்துக்கு ஆசனம் அளிக்காமலும் இருந்தான்.அது கண்டு வெகுண்ட கவிகாளமேகம்ஜம்புகேச்சுவரத்தின் (இன்றைய திருவானைக் காவல்) திசையை நோக்கி மானசீகமாகஅகிலாண்டவல்லி தேவி சாரதையை(சரஸ்வதி தேவியை) தியானித்து கீழ்க்கண்ட பாடலைப் பாடினார். 

'வெள்ளைக் கலையுடுத்து,வெள்ளைப் பணிபூண்டு

வெள்ளைக் கமலத்து வீற்றிருப்பாள்;-வெள்ளை

அரியா சனத்தில் அரசரோ டென்னைச்

சரியாச னத்துவைத்த தாய்

என்பது முதற்கொண்ட 'சரஸ்வதி மாலை'என்ற ஒரு பிரபந்தம் பாடினார்.அவ்வளவில் வாணி கடாட்சத்தால் திருமலை ராயன் இருந்த ஆசனம் வளர்ந்து கவி காளமேகம் அமர இடம் தந்தது.

இன்று சரஸ்வதி பூஜை எனவே இன்றைய தேதியிலேயே இதை வெளியிட வேண்டி இன்று வரை முழுமையாக்காமல் வைத்திருந்தேன்.இன்று எல்லோரும் வாணியை வேண்டி கல்வியும்,வளமும்,நலமும் பெற்று வாழ வேண்டுகின்றேன். 

படிக்கும் அன்பர்கள் தயவு செய்து கருத்துரை பதியவும்.இது எனக்கு அடுத்த பதிவு எழுத அவசியம் தேவை.

நன்றி

என்றென்றும் நட்புடன்
சாமீ அழகப்பன்

Saturday, October 2, 2010

சில தனிப்பாடற் காட்சிகள் 10




பட்டினத்தாரின் மகன் வெளி நாடு போய் பணம் சம்பாதித்து வருவான் என்றால் பட்டினத்தார் கொடுத்தனுப்பிய விலையுயர்ந்த பொருட்களை கொடுத்து நெற்தவிடும் சாணத்தினால் செய்யப்பட்ட வறட்டிகளையும் கொண்டு வந்திருந்தான்.அது கண்ட பட்டினத்தார் கடுங்கோபமுற்று தனது கடையில் வைத்து மகனைத் திட்டிவிட மகன் வீட்டிற்குச் சென்று தன் அன்னையான சிவகலையிடம் ஒரு பேழையைக் கொடுத்துவிட்டு அந்தர்த் தியானம் ஆகிவிடுகிறான் (மறைந்துவிடுகிறான்).

 பட்டினத்தார் தன் மகன் வீட்டிற்குச் சென்றவுடன்.தன் மகன் கொண்டு வந்த சாணத்தினால் செய்யப்பட்ட வறட்டிகளை உடைத்துப் பார்க்க உள்ளே நவரத்தினங்களும், வைரம் முதலானவைகளும் இருந்தன.நெற்தவிடு அத்தனையும் தங்கத் தூள்களாய் இருக்க பட்டினத்தார் வருந்தி வீட்டிற்கு ஒட, அவர்  மனைவி சிவகலை மகன் கொடுத்த பேழையை எடுத்துக் கொடுத்து அதில் பெரும் செல்வம் இருப்பதாகக் கூற,பட்டினத்தார் அந்தப் பேழையைத் திறந்து பார்த்தார்.
அதில்  ஒரு ஓலை நறுக்கும்,காதற்ற ஊசியும் இருந்தது.அந்த ஓலையில் 

'காதற்ற ஊசியும் வாராது காணுங் கடை வழிக்கே '

என்றிருந்தது.அந்த ஓலையில் கண்ட வார்த்தைகளுக்குப் பொருள் காது அறுந்து போன ஊசி தைக்கவும் உதவாது,எதற்கும் பயன்படாது,  அதுகூட நாம் இறந்து போன பிறகு போகும் கடை வழியான, இறப்புக்குப்பின் வராது ,என்பதுதான். அதைக் கண்டதும் பட்டினத்தார்க்கு ஞானம் பிறந்தது.

அதன்பின் அவர் கீழ்க் கண்ட பாடலைப் பாடியபடியே தன் ஆடைகளைக் களைந்து கோவணம் அணிந்து துறவு பூண்டார்.அந்தப் பாடல் இதோ எங்கள் தாத்தா வைத்திருந்த மிகப் பழைய நூலில் இருந்து நகல் எடுத்து தங்களின் பார்வைக்காக கொடுத்துள்ளேன்.கண்டு இன்புறுவீர்களாக.






அதன் பொருள் பட்டைக் கிழித்து நன்றாகச் சுருட்டி அதில் பருமையான ஊசியையும் விரும்பி எடுத்து என் அடர்ந்த கூந்தலையுடைய என் மனைவியின் கையில் முன்பே கொடுத்து வைத்து,அதை என் கையில் நான் பெற்றவுடன் கனமான மாயம் செய்ய வல்லவளால் நேர்ந்ததான காமம் எல்லாம் விட்டுப் பிரியவென்று ,இவ்வாறு சிவம் மீண்டு ஞானம் கிடைத்து கடைத்தேற வழி பிறந்தது என்கிறார்.











நன்றி 
இப்படிக்கு என்றென்றும் நட்புடன்
சாமீ அழகப்பன்   .

சில தனிப்பாடற் காட்சிகள் 9

ஒரு முறை நாடெங்கும் வறட்சியாகி பசி,பஞ்சம் தலை விரித்து ஆடும் போது மன்னன் முதல் மக்கள் வரை அவ்வையாரிடம் மழை பெய்ய அருள் புரிய வேண்டி நிற்க.
அவ்வையார் கீழ்க்கண்ட பாடலைப் பாட மழை கொட்டித் தீர்த்தது.

நெல்லுக் கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடி
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்;-தொல்லுலகில் 
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை.


நெல்லுக்கு நீர் பாய்ச்சும் போது அந்தத் தண்ணீர் வாய்க்கால் வழியோடி ஆங்காங்கே இருக்கும் புல்லுக்கும் பாயும்.அது போலவே இந்தத் தொன்மையான உலகில் நல்லார் ஒருவர் உள்ளாரேயானால் அவருக்காக எல்லோருக்கும் மழை பொழியும் எனக் கூறவும் மழை கொட்டித் தீர்த்தது.



நன்றி 
இப்படிக்கு என்றென்றும் நட்புடன்
சாமீ அழகப்பன்   

Tuesday, September 28, 2010

சில தனிப்பாடற் காட்சிகள் 8

சில புலவர்கள் பொறாமையின் காரணமாக அவ்வையார் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு அவரை நிந்தனை செய்து வந்தனர். ( இந்தக் காலத்தில் இவ்வளவு பெண்ணடிமைத்தனம் இருக்கும்போது, அந்தக்காலத்தில் எவ்வளவு இருந்திருக்கும்).
கம்பர் சிலம்பி என்றொரு தாசியை ஐந்நூறு பொன் பெற்று ஏழையாக மாற்றியதை அவ்வையார் பணக்காரியாக மாற்றியதால் அவ்வையார் மீது மிகுந்த காழ்ப்புணர்ச்சி கொண்டு அவரை நிந்தனை செய்த கதையை இப்போது பார்ப்போம்.

மேற்கண்ட நிகழ்ச்சி நடந்த பின் கம்பர் அவ்வையாரைப் பார்த்து  அவ்வையாரை அடியே என்றழைப்பதற்காக

'ஒரு காலடி நாலடிப் பந்தலடீ' 

கம்பர் கேட்க

அவ்வையார் கம்பரைப் பார்த்து 

'எட்டேகால் லட்சணமே ! எமனே றும்பரியே !
மட்டில் பெரியம்மை வாகனமே !;-முட்டமேற்
கூரையில்லா வீடே ! குலராமன் தூதுவனே !
ஆரையடா சொன்னா யது ! ' 

அவ்வையார் சொல்ல கம்பர் வெட்கித் தலை குனிந்தார்.

 {கம்பர் அவ்வையாரைப் பார்த்து அவ்வையாரை அடியே என்றழைப்பதற்காக'ஒரு காலடி நாலடிப் பந்தலடீ' என்று கேட்டது ஒரு கால் அடியாகவும் நாலிலைப் பந்தலடியாகவும் இருப்பது ஆரைக் கீரை.

அதற்கு அவ்வையார் கம்பரைப் பார்த்து எட்டு என்பது தமிழ் எழுத்துக்களில் 'அ' ,அதே போல் கால் என்பது தமிழ் எழுத்துக்களில் ' வ '
அதன்பின் உள்ள லட்சணமே சேர்ந்தால் அவலட்சணமே! என்றும், எமனேறும் பரி என்பது எருமை மாடே! என்றும், மட்டில் பெரியம்மை வாகனமே !என்பது மூத்த தேவியான மூதேவியின் வாகனமான கழுதையே! என்றும்,முட்டமேற் கூரையில்லா வீடே !, என்பது கூரையில்லா வீடு குட்டிச்சுவரே! என்றும், குலராமன் தூதுவனே !என்பது குல ராமன் தூதுவன் அனுமன் குரங்கு என்பதால் குரங்கேஎன்றும், ஆரையடா சொன்னாய் அது! என்பது ஆரைக் கீரையைத்தானடா சொன்னாய்! என்றும், பொருள் தரும்.
நன்றி 
இப்படிக்கு என்றென்றும் நட்புடன்
சாமீ அழகப்பன்