Saturday, October 9, 2010

சில தனிப்பாடற் காட்சிகள் 11(சரஸ்வதி பூஜை ஸ்பெஷல்)

காளமேகம் எனக்கு பிடித்த தலைமைப் புலவர்.அவர் எழுதிய கவிதைகள் பலர் பலருடைய வலைப் பூக்களில் வெளியிடுகின்றனர். சித்தர் ராச்சியம் தோழியும்,ஞான வெட்டியான் அவர்களும் வெளியிடுகின்றனர்.  அவர்கள் வெளியிடும் பாடல்கள் தவிர்த்து பிற பாடல்கள் மட்டுமே வெளியிட முயற்சி செய்கிறேன்.

ஒருமுறை அதிமதுர கவிராயர் என்பவர் வீணான படாடோபத்துடன் ( இப்போதைய வார்த்தைகளில் பந்தாக் காட்டுவது ) யானை மீது ஏறி பல புலவர்கள் சூழ்ந்து நடந்து வர கொட்டு முழக்கமிட,அதிமதுர கவி வருகிறார் ! வருகிறார் ! பராக்! பராக்! பராக்! என்று பராக்காரன் புகழ்ந்து பறை சாற்ற ,வீரர்கள் வீதியில் இருப்போர்களை போ!போ! என்று விரட்ட,அவ்வழியே வந்த நம் கவி காளமேகம் இதைக் கண்டு கோபம் கொண்டு கீழ்க் காணும் கவியைப் பாட

அதிமதுர மென்றே அகிலமறிய

அதிமதுர மாயெடுத்துச் சொல்லும் ;- புதுமையென்ன?

காட்டுச் சரக்குலகில் காரமில் லாச்சரக்குக்

கூட்டுச் சரக்கதனைக் கூறு.

பொருள் ;- அதிமதுரம் என்று என்று உலகோர் அறியும்படி அதிமதுரமாகப் புகழ்ந்து பறை சாற்றுகின்றையே! காட்டிலுள்ள சரக்குகளில் காரமில்லாத சரக்கு எதுவென்றும் ? கூட்டி உபயோகிக்கின்ற சரக்கு எதுவென்றும் கூறு?

என்பதாகப் பாடினார். 

அதிமதுரத்தை எப்போதும் மற்ற மருந்துகளுடன் கூட்டுச் சரக்காகவே உபயோகிக்க மாட்டார்கள்.தனிச் சரக்காக உபயோகிக்க மாட்டார்கள். அதுபோல தனியாக பிரகாசிக்கும் எந்தத் திறமையும் இல்லாத நீ ஏன் இந்தப் படாடோபம் செய்கிறாய் ? என்ற கருத்தோடு இதைக் கூறினார்.

இதைக் கேட்டவுடன் அதிமதுர கவி தூக்கிப் போட்டாற் போலிருந்ததனால்,  கோபம் கொண்டுஇவன் இவ்வளவு அவமரியாதையாகப் பேசுகிறான் அரசரிடம் கூறி இவனுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் அவன் யாரென்று விசாரித்து வா என்று ஒரு வீரனை அனுப்பி வைத்தான்.

அந்த வீரனும் கவி காளமேகத்தைப் பார்த்து நீர் யார்உம் பேர் என்னஉம் ஊர் யாது?என்று விசாரிக்ககவி காளமேகம் நான் சொல்வதை யெல்லாம் உன்னால் திருப்பிச் சொல்ல முடியாது எனவே நான் ஒரு ஓலையில் இதை எழுதித் தருகிறேன்.என்று கூறி கீழ்க் கண்டவாறு எழுதித் தந்தார்,

தூதைந்து நாழிகையில் ஆறுநாழிகைதனில்

சொற் சந்த மாலை சொல்லத்

துகளிலா அந்தாதி யேழுநா ழிகைதனில்

தொகைபட விரித்துரைக்கப்

பாதம்செய் மடல்கோவை பத்துநா ழிகைதனில்

பரணியொரு நாள்முழுதுமே

பாரகாவியமெலாம் ஓரிரு தினத்திலே

பகரக் கொடி கட்டினேன்

சீதம்செ யுந்திங்கள் மரபினான் நீடுபுகழ்

செய்யதிரு மலை ராயன்முன்

சீருமா றாகவே தாறுமா றுகள்சொல்

திருட்டுக் கவிப் புலவரைக்

காதங் கறுத்துச் சவுக்கிட் டடித்துக்

கதுப்பில் புடைத்துவெற்றிக்

கல்லணையி னோடுகொடிய கடிவாளம் இட்டேறு

கவிகாள மேக நானே.

என்று தம் ஆசுகவித் திறத்தைச் சிறப்பித்தும்,தன் பெயரை வெளிப்படையாகச் செப்பியும்,திருமலைராயன் சமஸ்தானத்து வித்துவான்கள் அக்ரமத்தைக் குறிப்பிட்டுச் சொல்லியும் அவர்களை இகழ்ந்தும் ஒரு சீட்டுக்கவி எழுதி அந்த வீரனிடம் கொடுத்தனுப்பினார்.

இந்த விஷயதைக் கேட்ட அதிமதுர கவிராயர் மன்னரிடம் மன்னரே  அவன் எங்களை மட்டுமல்ல ,உங்களையும் உங்கள் சமஸ்தானத்து கவிராயர்களையும் அவமதித்துள்ளான்,எனவே நான்கு வீரர்களை அனுப்பி அவனை இழுத்து வரச் செய்து தக்க தண்டணை வழங்க வேண்டும் என்று கூறினர்.இது கேட்ட மன்னன் திருமலைராயன் உடனே நான்கு வீரர்களை அனுப்பி கவி காளமேகத்தை பிடித்து இழுத்து வரச் சொல்லி ஆணையிட்டார்.

அவர்கள் கவி காளமேகத்தைப் பிடித்து இழுத்து வர முயற்சிக்கையில்அவர் வீரர்களைப் பார்த்து என்ன தவறு செய்தேன்.நான் குற்றவாளி அல்ல நான் பெருங் கவி காளமேகம் வீண் தொல்லை செய்தால் அறம் பாடி அழித்துவிடுவேன்.


(அறம் பாடுதல் என்பது அக்காலத்தில் இறைவனிடம் நேரடியாக அறத்தைக் கூறி அறம் நிலைநாட்டுதல் அதன் மூலம் அறம் குலைத்தவர்களை தண்டித்தல்.ஒரு நூற்றாண்டு முன் வரை அறம் பாடி அவர் பாடலால் தீபம் ஏற்றப்பட்டால் அவர் குற்றவாளியல்ல என்று நிரூபித்துள்ளார்கள்என்று சொல்ல வீரர்கள் பயந்து பணிவோடு ஒதுங்கி விலகி நின்றார்கள்.நானே வருகிறேன் என்று கூறினார்.

அரசன் சமூகத்திற்கு சென்றால் அங்கே,அரசனைச் சுற்றி அதிமதுர கவிராயர் அரசவைக் கவிஞராக அமர்ந்திருக்க, அரசனைச் சுற்றி நெருக்கமாக அவைப் புலவர்கள் அனைவரும் அமர்ந்து கொண்டு,கவி காளமேகத்தை அரசனிடம் நெருங்க விடாமலும் ஆசனம் கொடுக்காமலும் பாராமுகமாக இருந்தனர்.

இது கண்ட கவி காளமேகம் அரசனிடம் ஒரு எலுமிச்சம்பழத்தை எடுத்து நீட்ட,பெரியோர்கள் தரும் அட்சதை,பூ,பழம் இவற்றை மறுக்கவோ, அவமதிக்கவோ கூடாது என்பது விதியாகையால்,மன்னன் கை நீட்டி அதைப் பெற முயல அவைப் புலவர்கள் விலகி வழிவிட்டனர்.


மன்னன் எலுமிச்சம் பழம் பெற்ற பின்னும் ஏதும் பேசாமலும்கவி காளமேகத்துக்கு ஆசனம் அளிக்காமலும் இருந்தான்.அது கண்டு வெகுண்ட கவிகாளமேகம்ஜம்புகேச்சுவரத்தின் (இன்றைய திருவானைக் காவல்) திசையை நோக்கி மானசீகமாகஅகிலாண்டவல்லி தேவி சாரதையை(சரஸ்வதி தேவியை) தியானித்து கீழ்க்கண்ட பாடலைப் பாடினார். 

'வெள்ளைக் கலையுடுத்து,வெள்ளைப் பணிபூண்டு

வெள்ளைக் கமலத்து வீற்றிருப்பாள்;-வெள்ளை

அரியா சனத்தில் அரசரோ டென்னைச்

சரியாச னத்துவைத்த தாய்

என்பது முதற்கொண்ட 'சரஸ்வதி மாலை'என்ற ஒரு பிரபந்தம் பாடினார்.அவ்வளவில் வாணி கடாட்சத்தால் திருமலை ராயன் இருந்த ஆசனம் வளர்ந்து கவி காளமேகம் அமர இடம் தந்தது.

இன்று சரஸ்வதி பூஜை எனவே இன்றைய தேதியிலேயே இதை வெளியிட வேண்டி இன்று வரை முழுமையாக்காமல் வைத்திருந்தேன்.இன்று எல்லோரும் வாணியை வேண்டி கல்வியும்,வளமும்,நலமும் பெற்று வாழ வேண்டுகின்றேன். 

படிக்கும் அன்பர்கள் தயவு செய்து கருத்துரை பதியவும்.இது எனக்கு அடுத்த பதிவு எழுத அவசியம் தேவை.

நன்றி

என்றென்றும் நட்புடன்
சாமீ அழகப்பன்

Saturday, October 2, 2010

சில தனிப்பாடற் காட்சிகள் 10




பட்டினத்தாரின் மகன் வெளி நாடு போய் பணம் சம்பாதித்து வருவான் என்றால் பட்டினத்தார் கொடுத்தனுப்பிய விலையுயர்ந்த பொருட்களை கொடுத்து நெற்தவிடும் சாணத்தினால் செய்யப்பட்ட வறட்டிகளையும் கொண்டு வந்திருந்தான்.அது கண்ட பட்டினத்தார் கடுங்கோபமுற்று தனது கடையில் வைத்து மகனைத் திட்டிவிட மகன் வீட்டிற்குச் சென்று தன் அன்னையான சிவகலையிடம் ஒரு பேழையைக் கொடுத்துவிட்டு அந்தர்த் தியானம் ஆகிவிடுகிறான் (மறைந்துவிடுகிறான்).

 பட்டினத்தார் தன் மகன் வீட்டிற்குச் சென்றவுடன்.தன் மகன் கொண்டு வந்த சாணத்தினால் செய்யப்பட்ட வறட்டிகளை உடைத்துப் பார்க்க உள்ளே நவரத்தினங்களும், வைரம் முதலானவைகளும் இருந்தன.நெற்தவிடு அத்தனையும் தங்கத் தூள்களாய் இருக்க பட்டினத்தார் வருந்தி வீட்டிற்கு ஒட, அவர்  மனைவி சிவகலை மகன் கொடுத்த பேழையை எடுத்துக் கொடுத்து அதில் பெரும் செல்வம் இருப்பதாகக் கூற,பட்டினத்தார் அந்தப் பேழையைத் திறந்து பார்த்தார்.
அதில்  ஒரு ஓலை நறுக்கும்,காதற்ற ஊசியும் இருந்தது.அந்த ஓலையில் 

'காதற்ற ஊசியும் வாராது காணுங் கடை வழிக்கே '

என்றிருந்தது.அந்த ஓலையில் கண்ட வார்த்தைகளுக்குப் பொருள் காது அறுந்து போன ஊசி தைக்கவும் உதவாது,எதற்கும் பயன்படாது,  அதுகூட நாம் இறந்து போன பிறகு போகும் கடை வழியான, இறப்புக்குப்பின் வராது ,என்பதுதான். அதைக் கண்டதும் பட்டினத்தார்க்கு ஞானம் பிறந்தது.

அதன்பின் அவர் கீழ்க் கண்ட பாடலைப் பாடியபடியே தன் ஆடைகளைக் களைந்து கோவணம் அணிந்து துறவு பூண்டார்.அந்தப் பாடல் இதோ எங்கள் தாத்தா வைத்திருந்த மிகப் பழைய நூலில் இருந்து நகல் எடுத்து தங்களின் பார்வைக்காக கொடுத்துள்ளேன்.கண்டு இன்புறுவீர்களாக.






அதன் பொருள் பட்டைக் கிழித்து நன்றாகச் சுருட்டி அதில் பருமையான ஊசியையும் விரும்பி எடுத்து என் அடர்ந்த கூந்தலையுடைய என் மனைவியின் கையில் முன்பே கொடுத்து வைத்து,அதை என் கையில் நான் பெற்றவுடன் கனமான மாயம் செய்ய வல்லவளால் நேர்ந்ததான காமம் எல்லாம் விட்டுப் பிரியவென்று ,இவ்வாறு சிவம் மீண்டு ஞானம் கிடைத்து கடைத்தேற வழி பிறந்தது என்கிறார்.











நன்றி 
இப்படிக்கு என்றென்றும் நட்புடன்
சாமீ அழகப்பன்   .

சில தனிப்பாடற் காட்சிகள் 9

ஒரு முறை நாடெங்கும் வறட்சியாகி பசி,பஞ்சம் தலை விரித்து ஆடும் போது மன்னன் முதல் மக்கள் வரை அவ்வையாரிடம் மழை பெய்ய அருள் புரிய வேண்டி நிற்க.
அவ்வையார் கீழ்க்கண்ட பாடலைப் பாட மழை கொட்டித் தீர்த்தது.

நெல்லுக் கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடி
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்;-தொல்லுலகில் 
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை.


நெல்லுக்கு நீர் பாய்ச்சும் போது அந்தத் தண்ணீர் வாய்க்கால் வழியோடி ஆங்காங்கே இருக்கும் புல்லுக்கும் பாயும்.அது போலவே இந்தத் தொன்மையான உலகில் நல்லார் ஒருவர் உள்ளாரேயானால் அவருக்காக எல்லோருக்கும் மழை பொழியும் எனக் கூறவும் மழை கொட்டித் தீர்த்தது.



நன்றி 
இப்படிக்கு என்றென்றும் நட்புடன்
சாமீ அழகப்பன்